நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, “காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) என்ற அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அமெரிக்காவிலிருந்து இன்று இந்தியா திரும்பிய அவருக்கு, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்துடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய அபிஜீத் திப்கேவுக்கு ஆதரவாக, “ஜெய் பீம்”, “அபிஜீத் திப்கே ஜிந்தாபாத்” என அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அங்கிருந்து அவர் நேரடியாகப் போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டார். முன்னதாக அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது, “என் விதியை அரசியலமைப்பின் கைகளில் ஒப்படைக்கிறேன்” என Jaibhim என்ற ஹேஷ்டேக்குடன் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அபிஜீத் திப்கேவைப் பார்ப்பதற்காகப் பல்வேறு தரப்பு மக்களும் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். விமான நிலைய ஊழியரான மிதிலேஷ் குமார் தனது பணி முடிந்ததும் திப்கேவைக் காண ஓடிவந்ததாகக் கூறினார்.