தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும்.

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளும் ‘லைவ் வெப்காஸ்டிங்’ (Live Webcasting) மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பெண்கள் 85.76%, ஆண்கள் 83.57%, மூன்றாம் பாலினத்தவர் 60.49% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இறுதி நிலவரப்படி, மாநிலத்தின் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தைக் கடந்துள்ளது.
தமிழக வரலாற்றில் மிக அமைதியாகவும், அதேசமயம் மிக அதிக எண்ணிக்கையிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.