Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
திண்டுக்கல்: மதுரை அருகே நடந்த FQL, VG ஆன்லைன் டிரேடிங் மோசடியில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணத்தை இழந்த நிலையில், நத்தம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிலிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்த விவசாயியின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் FQL மற்றும் VG செயலி மூலமாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி கொடுப்பதாக கூறி மிகப்பெரிய ஆன்லைன் மோசடி நடந்திருக்கிறது. ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் தருகிறோம் என்று கூறியதால், ஏராளமானோர் நம்பி பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிலம், நகையை விற்று முதலீடு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை மட்டுமல்லாமல் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களிலும் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த விவசாயி ஒருவர் விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த கும்பகோணம் மகன் ராசு. 25 வயது விவசாயியான இவர் FQL, VG ஆன்லைன் செயலி
வழியாக அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.15 லட்ச வரை முதலீடு செய்திருக்கிறார்.
இதன்பின் ஆன்லைன் மோசடியில் சிக்கியதை அடுத்து விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அவரது உறவினர்கள் சடலத்துடன் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலை வத்திபட்டி பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் நத்தம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உறவினர்கள் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியே பரபரப்பாக இருந்தது. இதன்பின் போலீசார் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, ராசு உடலை உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.