
கடன் பத்திரங்களில் முதலீடு பற்றி முதலில் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், கடன் பத்திர முதலீடு என்பது யாருக்குத் தேவை இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே அதில் முதலீடு செய்ய பரிசீலிக்கலாம் என்பதுதான். உதாரணமாக, நீங்கள் ரிஸ்க்கே எடுக்க விரும்பாத ஒரு முதலீட்டாளர். எனவே, உங்கள் பணம் அனைத்தையும் வங்கி எஃப்.டி-யில் வைத்திருக்கிறீர்கள். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை மாதந்தோறும் எடுத்து உங்கள் செலவுகளை செய்து வருகிறீர்கள். ஆனால், வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் உங்களுக்குப் போதவில்லை. அதைவிட, ஒன்றிரண்டு சதவிகித வட்டி அதிகமாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். இந்த வருமானம் மாதந்தோறும் கிடைப்பது அவசியம் என்று நினைக்கும்பட்சத்தில் நீங்கள் கடன் பத்திரங்களில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
உறுதியான வட்டி வருமானம், அது மாதந்தோறும் கிடைத்தால் நல்லது என்று நினைப்பவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. 30 வயதில் இருப்பவர்கள்கூட இருக்கலாம். உதாரணமாக, 30 வயது கொண்ட ஒருவருக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் வேண்டும். இதற்காகக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். 18 மாதம் முதல் 24 மாதங்கள் வரை கடன் பத்திரங்களின் மூலம் வட்டி வருமானத்தைப் பெற்றபின், கடன் பத்திரத்தின் முதிர்வுக்குப் பிறகு அவர் முதலீடு செய்த பணம் அனைத்தையும் திரும்பப் பெறுகிறார்.