அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர் வரும் வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-வது MLA-வாக பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக பொது செயலாளர் ஆனந்த் முன்னிலையில் நடைபெறவுள்ள இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் சேர்ந்து கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த முடிவு அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.

ஏற்கனவே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்தால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 41 ஆக குறையும்.
மேலும், திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயரவுள்ளது. இதனால் மாநில அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.