“குசு போட்டுக்கலாமா? அந்த சத்தத்துக்கு பர்மிஷன் உண்டா?”
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தில் வரும் அரசியல் நையாண்டி வசனங்களில் இதுவும் ஒன்று. இரும்புக் கோட்டை வல்லரசை நோக்கி ஜெய்சங்கர்புரத்து மூத்த குடிமகன் கேட்ட கேள்வி இது. அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை பகடி செய்யும் காட்சியில் இந்த வசனம் இடம்பெற்றிருக்கும். அதற்கு, இரும்புக் கோட்டையின் எடுபிடி சொல்லும் பதில் அராஜகத்தின் உச்சமாக இருக்கும்.
மீறி விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள்? குசு போடுவதை அல்ல, அணுகுண்டு சோதனை நடத்தியதை? இப்படியொரு இக்கட்டான சூழல் இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமெரிக்காவுக்கு எழுந்தது.
வளிமண்டல மாதிரிகளை (Airborne Sampling) எடுத்து சோதனை செய்வது அமெரிக்காவின் வழக்கம். வானிலை முன்னறிவிப்புக்கு, காற்றின் தரத்தை ஆய்வு செய்ய என சொல்லிக் கொள்ளும். ஆனால், அதற்கெல்லாம் கிடையாது. எந்த நாடும் ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தி இருக்கிறதா? அதைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வு அது.
1949 செப்டம்பர் 3-ம் தேதி. காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புறப்பட்டது WB-29 விமானம். வழக்கம் போல பசிபிக் பெருங்கடலில் அலாஸ்கா அருகே மாதிரியை சேகரித்தது. சோதனையில் அசாதரணமான கதிரியக்கம் இருந்தது. காற்றின் தரத்தைக் கண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் மிரண்டனர்.
அணு ஆயுதத்தை சோதித்துப் பார்த்த ஒரே நாடு – அமெரிக்காவுக்கு மட்டுமே இந்தப் பெருமை சொந்தம். இப்போது இந்த ஏகபோக பெருமையில் குறுக்கே வந்து நின்றது ரஷ்யா. (அணுகுண்டை மக்கள் மீது வீசி சோதித்துப் பார்த்த சிறுமை அமெரிக்காவுக்கு மட்டுமே சொந்தம்.)
உடனே, அதிபர் ஹாரி ட்ருமனுக்கு தகவல் கொடுத்தனர். வல்லரசு அதிபர் அதிர்ச்சியில் உறைந்தார். ‘ரஷ்யா கட்டாயம் அணுஆயுத சோதனை நடத்தும்.’ ட்ரூமன் உறுதியாக எதிர்பார்த்திருந்தார். ஆனால், அது அவ்வளவு சீக்கிரத்தில் அது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தனர். இன்று நடந்தே விட்டது. ஜோசஃப் ஸ்டாலின் இனி என்னென்ன ஆட்டம் போடுவாரோ… நினைக்க நினைக்க ட்ரூமனின் ஈரற்குலை நடுங்கியது.