Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் | Tamil Nadu Electricity Complaints: TNEB Chairman J. Radhakrishnan Steps In to Resolve Public Grievances Directly

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

சென்னை: “இரவு நேரத்துல திடீர்னு கரண்ட் போய்டுதே…” – இதுதான் இப்போதைக்கு சென்னை மற்றும் அதன் புறநகர் மக்களின் பிரதான கவலை! கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் இந்த வேளையில், இரவு நேர மின் நுகர்வு ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், மக்களின் மின்சாரப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, களத்தில் நேரடியாக இறங்கியுள்ளார் தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

Power Outage

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவர், நேற்று திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய மின் விநியோக மையங்களை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார்.

அதிரடி விசிட்… அதிகாரிகளுக்கு அட்வைஸ்!

பொன்னேரி அருகே உள்ள மேலூர் மற்றும் பஞ்செட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 110 கே.வி (கிலோ வோல்ட்) துணை மின் நிலையங்கள், மற்றும் இருளிப்பட்டுவில் உள்ள 33 கே.வி துணை மின் நிலையம் என அடுத்தடுத்து மூன்று முக்கிய இடங்களில் ஜெ.ராதாகிருஷ்ணன் மெகா ஆய்வை நடத்தினார்.

துணை மின் நிலையங்களின் அன்றாடச் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? பராமரிப்புப் பணிகள் முறையாக நடக்கின்றனவா? ஒருவேளை திடீரென மின்தடை ஏற்பட்டால், அடுத்த சில நிமிடங்களில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகள் என்ன மாதிரியான ‘பிளான்’ வைத்திருக்கிறார்கள்? என ஒவ்வொன்றையும் இம்மி பிசகாமல் கேட்டறிந்தார்.

“மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதுதான் நம் முதல் இலக்கு. எங்காவது பழுது ஏற்பட்டால், அதைத் தேடி அலையாமல் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் விரைவாகக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். நுகர்வோர் சேவை மேம்பாட்டில் எந்த சமரசமும் கூடாது” என அதிகாரிகளுக்கு அங்கேயே ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

₹256 கோடி மெகா ப்ராஜெக்ட்: எப்போது திறப்பு?

இதனைத் தொடர்ந்து, பஞ்செட்டி துணை மின் நிலைய வளாகத்தில் சுமார் ரூ.256.45 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் அமையவிருக்கும் புதிய 230/110 கே.வி துணை மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பஞ்செட்டி புதிய துணை மின் நிலையப் பணிகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் இது முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்.

இந்த மெகா புராஜெக்ட் பயன்பாட்டுக்கு வந்தால், கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய் கண்டிகை, சோத்துப் பெரும்பேடு, பொன்னேரி, மேலூர், அலமாதி, பெரியபாளையம் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளின் மின்சாரத் தேவை தங்கு தடையின்றிப் பூர்த்தியாகும்” என்று நம்பிக்கையளித்தார்.

தொடரும் ஃபீல்டு விசிட்… ஆவடிக்குக் கிடைத்த குட் நியூஸ்!

பஞ்செட்டியை முடித்துக் கொண்டு நேராக அலமாதி துணை மின் நிலையத்திற்கு விரைந்தார் மின்வாரியத் தலைவர். அங்கே, பாடியநல்லூர் பகுதியில் நடந்து வரும் புதைவட கேபிள் (Underground Cable) பழுது நீக்கும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.

அடுத்ததாக, ஆவடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அங்குள்ள துணை மின் நிலையத்தை ரூ.102 கோடி மதிப்பில் 230/110 கே.வி மின் நிலையமாக தரம் உயர்த்தும் (Upgradation) பணிகளை நேரில் பார்வையிட்டு, “வேலையை சீக்கிரம் முடியுங்க!” என அதிகாரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்தார்.

இரவு நேர மின் தடை ஏன்? – ஓப்பனாகப் பேசிய ராதாகிருஷ்ணன்

சென்னையின் தற்போதைய மின்சார நிலவரம் குறித்துப் பேசிய அவர், “சென்னையில் மட்டும் சுமார் 38 லட்சம் மின் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்த அசாத்திய கோடைக் காலத்தில், எல்லாரும் ஒரே நேரத்தில் இரவு நேரங்களில் ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதால், மின் பகிர்மான அமைப்பில் சில தொழில்நுட்பச் சவால்கள் ஏற்படுவது இயல்புதான்.

சில பகுதிகளில் மின் மாற்றிகள் (Transformers) மற்றும் கேபிள்களில் அதிகப் பளு (Overload) ஏற்படுவதால் ‘ஃபியூஸ்’ போவது போன்ற தற்காலிகப் பிரச்சினைகள் வருகின்றன. ஆனால், எங்கள் குழுவினர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து, புகார்கள் வந்த உடனுக்குடன் பழுதுகளைச் சரிசெய்து மின் விநியோகத்தை வழங்கி வருகிறார்கள்” என்று சென்னை மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த அதிரடி ஆய்வுகள் மற்றும் முன்கூட்டிய திட்டமிடல்கள், இந்த வெயிலில் தமிழக மின்வாரியத்தை ‘COOL’ ஆக இயங்க வைக்கும் என நம்பலாம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *