ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல்.13) ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் அறிமுக பந்துவீச்சாளர்களான பிரஃபுல் ஹிங்கேவும், சகிப் ஹுசைனும் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி தங்கள் திறமையை நிரூபித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தனர்.
இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பேசிய அணியின் கேப்டன் ரியான் பராக், ” உண்மையைச் சொல்லப்போனால், இந்தத் தோல்வியைப் பற்றி ஃபீல் பண்ணிக்கொண்டிருப்பதற்கு எங்களுக்கு அதிக நேரமில்லை.
நாங்கள் (நேற்றைய ஆட்டத்தில்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். எதிரணியினர் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது. எங்களுடைய சில தவறான கணக்கீடுகளே தோல்விக்குக் காரணம், ஆனால் இதை ஒரு சிறு பின்னடைவாக மட்டுமே கருதுகிறோம். இதைப் பற்றி அதிகமாக யோசிக்க மாட்டோம்.