Tamannaah: “தென்னிந்திய திரையுலகம் ஆணாதிக்கப் பார்வை கொண்டது" – நடிகை தமன்னா பாட்டியா

Spread the love

திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக விளங்கும் தமன்னா, ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ சேனலுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “நான் நடனமாடிய பாடல்களை வெறும் ‘ஐட்டம் சாங்ஸ்’ என்று கருதாமல் ‘பார்ட்டி சாங்ஸ்’ என்றே பார்க்கிறேன். கரீனா கபூர், கத்ரீனா கைப் போன்றோரின் ஹிட் பாடல்களைப் போல, சில திரைப்படங்களை விடவும் இத்தகைய பாடல்களே மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. மேலும், கவர்ச்சி என்பது கேமராவிற்காக மட்டும் செய்வதல்ல, அது என் இயல்பான ஆளுமையின் ஒரு பகுதி” என்று கூறிய தமன்னா, “ ‘ஸ்த்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ மற்றும் ‘தி பாஸ்டர்ட்ஸ் ஆஃப் பாலிவுட்’ தொடரின் ‘கஃபூர்’ போன்ற பாடல்களில் அந்தந்த கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, ரசித்து நடனமாடியிருக்கிறேன்.

தமன்னா பாட்டியா
தமன்னா பாட்டியா

இந்தித் திரையுலகில் நடிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. பாலிவுட்டில் இரண்டு வகையான நடிகர்கள் இருக்கிறார்கள். கலைநயமிக்க கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் வணிக ரீதியான கிளாமர் பாடல்களில் நடிப்பதில்லை. இந்தித் திரையுலகம் நடிகர்களுக்கு இந்தத் தேர்வு சுதந்திரத்தை அளிக்கிறது. அதே வேளையில் கலை மற்றும் வணிக ரீதியான படங்களை சமமாக கையாள்பவர்களே அங்கு தவிர்க்க முடியாத ‘சூப்பர் ஸ்டார்களாக’ மாறுகிறார்கள்.

தென்னிந்தியத் திரையுலகம் பெண்களைப் பார்க்கும் விதம் எப்போதும் பெண்களுக்குச் சாதகமாகவோ அல்லது கண்ணியமாகவோ இருப்பதில்லை. நான் தென்னிந்திய சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பக் காலத்திலேயே மக்கள் ஏன் இதைப் பற்றிப் பலவாறாகப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அது ஒரு குறிப்பிட்ட விதமான பார்வை. அதில் ஓர் ஆணாதிக்கப் போக்கு நிலவும். குறிப்பாகப் பாடல்களில் அதை நான் உணர்ந்திருக்கிறேன்.

தமன்னா பாட்டியா
தமன்னா பாட்டியா

வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமே முதன்மையாகக் கொண்ட சூழலில், தென்னிந்திய சினிமா அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாக இருக்கும். இதை என் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமே சொல்கிறேன். இங்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்ட திரைப்பயணத்தைக் கொண்டுள்ள நடிகைகள் பெரிய சவால்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒருபுறம் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. அதே வேளையில், வணிக ரீதியான பாடல் மற்றும் நடனக் காட்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரண்டையும் சமநிலையில் கையாண்டு சாதிக்க ஒரு நடிகைக்குத் தனித்துவமான ‘ஸ்டார்’ அந்தஸ்து தேவைப்படுகிறது. அப்படி கிடைத்தவர்கள்தான் வெற்றிகரமாக வலம் வருகிறார்கள்.” என்றார்.

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘பெட்டி’ (Peddi) திரைப்படத்தில், ஜான்வி மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சியான தோற்றத்தில் சித்திரிக்கப்பட்டதற்காக அண்மையில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் திருத்தப்பட்டதோடு, இயக்குநர் புச்சி பாபு சனா சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார். இச்சம்பவம் நடந்த சில நாள்களிலேயே, தென்னிந்தியச் சினிமாவில் பெண்களைக் கையாளும் விதம் குறித்து தமன்னா இத்தகைய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *