2026-ஆம் ஆண்டில் வலுவான எல் நினோ (El Nino) நிகழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அதன் தாக்கங்களை முன்கூட்டியே கண்காணித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக தமிழக அரசு உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA) சார்பில் செயல்படும் இந்தக் குழு, எல் நினோவால் ஏற்படக்கூடிய வறட்சி, மழைப்பொழிவு குறைவு, காவிரி நீர்வரத்து பாதிப்பு, வடகிழக்கு பருவமழையில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் உள்ளிட்ட அம்சங்களை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும்.

குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மதராஸ், WRI India, தமிழ்நாடு கிரீன் கிளைமேட் நிறுவனம், தமிழ்நாடு கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (TNMRF), சுகந்தி தேவதாசன் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் (SMRI), TNUIFS உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7 நிபுணர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிபுணர் குழு:
* தமிழகம் முழுவதும் மழை மற்றும் வறட்சி நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
* பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளை அடையாளம் காணும்.
* முன்எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த பரிந்துரைகள் வழங்கும்.
* வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கும்.
* பேரிடர் கால முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில் செயல்படும்.
இந்த நிபுணர் குழு 2026-27 மற்றும் 2027-28 ஆகிய இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது