இதனையடுத்து, ஏரல் தாலுகா அதிகாரிகள் மற்றும் குரும்பூர் காவல் நிலைய போலீஸார், ஆக்கிரமிப்பினை அகற்ற முயன்றனர். ஆனால், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் உள்ளுர் மக்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பின்னர் 20.08.2026 அன்று அதிகாலை 3 மணி அளவில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கோயில் இடித்து அகற்றப்பட்டது. விநாயகர் சிலை, ஏரல் தாசில்தார் செல்வகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியைச் சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். விநாயகர் கோயில் அகற்றப்பட்ட விவகாரம் காட்டுத் தீயாக பரவ, ரயில் நிலையம் முன்பு ஊர் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் மற்றும் மோகன் சி.லாசரஸை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதுகுறித்து இந்து முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அருணாச்சலத்திடம் பேசினோம்.
“குரும்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெல், வாழை விவசாயம்தான் பிரதானத் தொழில். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு குரும்பூரைச் சுற்றியுள்ள மக்கள், இந்த விநாயகர் சிலையை ரயில் நிலையம் அருகில் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். ரயில் நிலைய விரிவாக்கத்தின்போது, ரயில்வே ஊழியர்கள் அங்குள்ள அரச மரத்தடியில் வைத்துள்ளனர்.