மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, இன்று சட்டமன்றக் கூட்டத்தின் ஆளுநர் உரை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சட்டமன்றத்தில் ஆற்றப்பட்ட ஆளுநர் உரை என்பது ஒரு சடங்குபூர்வமான மற்றும் பாரம்பரிய ஜனநாயகக் கடமையாகும். அரசின் கருத்துக்களை ஆளுநர் வாசிப்பது மரபு. இன்றைய ஆளுநர் உரையின் பெரும்பாலான அம்சங்கள் முந்தைய திராவிட மாடல் அரசின் கொள்கைகளை அப்படியே வழிமொழியும் வகையிலேயே அமைந்துள்ளது.
இதன் மூலம், திராவிட இயக்க அரசியல் தத்துவத்தைத் தாண்டி இவர்களால் வேறு எந்தத் திசையிலும் செல்ல முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது.

இது திராவிட இயக்க அரசியலுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் ஆளுநர் உரையில் ஒன்றிய அரசின் பக்கம் தள்ளப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும் என உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு தனியாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்பதும், ஒன்றிய அரசின் முடிவுக்குப் பிறகே தனது நிலையைத் தெளிவுபடுத்தும் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.