‘ராஜா ராணி’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய்யை வைத்து மூன்று ஹிட் படைப்புகளைக் கொடுத்தவர் பாலிவுட்டுக்குள் என்ட்ரி தந்தார்.
அங்கு ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய ‘ஜவான்’ திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது இயக்குநர் அட்லீ, இப்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் ‘ராக்கா’ படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, இப்படத்தின் டைட்டில் டீசரும் வெளியிடப்பட்டிருந்தது.
இப்படத்தில் தீபிகா படுகோனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்போது இயக்குநர் அட்லீ – பிரியா அட்லீ தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினருக்கு முதலாவதாக ஆண் குழந்தை பிறந்தது. முதல் குழந்தைக்கு ‘மீர்’ எனவும் இவர்கள் பெயர் சூட்டினர். தற்போது இந்தத் தம்பதியினருக்கு இரண்டாவது குழந்தையாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தத் தகவலை அட்லீ – ப்ரியா அட்லீ தம்பதி, அவர்களுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். தற்போது, பெண் குழந்தை பிறந்திருப்பதற்குத் திரைத்துறையினர், ரசிகர்கள் எனப் பலரும், இந்த தம்பதியினருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.