கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள ஹோசா அயோத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாயுடு. இவர் தனது மகனிடம் ஆன்லைன் மொபைல் கேம்களை விளையாட வேண்டாம் என்று கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த 18 வயது மகன் தனது தந்தை, தாய் மற்றும் மூத்த சகோதரியை இரவு கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவரது தந்தையும் சகோதரி பிரகதியும் இறந்த நிலையில், அவரது தாயார் படுகாயமடைந்துள்ளார்.
சாய் வெங்கட் மணிதீப் என்ற அந்த மாணவர் பெற்றோர் மற்றும் சகோதரியை கத்தியால் குத்திய பிறகு தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டார். சம்பவத்தன்று இரவு வெங்கட் நாயுடு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் வெங்கட்டின் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

அதன் பிறகு ஒரு அறையில் வெங்கட் தம்பதியும், அவரது குழந்தைகளும் உறங்கினர். மற்றொரு அறையில் வெங்கட் பெற்றோர் படுத்திருந்தனர். இரவு 10.30 மணிக்கு வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினர் உறங்கிக்கொண்டிருந்த அறையில் ஏதோ சத்தம் கேட்டது.
உடனே வெங்கட்டின் தந்தை தாதாராவ் எழுந்து சென்று வெங்கட் அறையை திறக்க முயன்றார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வந்து கதவை திறந்தபோது வெங்கட், பிரகதி மற்றும் வெங்கட் மனைவி ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தனர். பிரகதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். ஆனால் வெங்கட் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். காயம் அடைந்தவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், நான்கு குடும்ப உறுப்பினர்களும் தூங்கிக் கொண்டிருந்த போது, சாய் வெங்கட் மணிதீப் விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களை கத்தியால் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
டாடாராவ் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தனது பேரன் சாய் வெங்கட் மணிதீப் திடீரென ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரகதியை சரமாரியாக தாக்கிவிட்டு பெற்றோரை தாக்கிவிட்டு தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக புகார் மனுவில் கூறியுள்ளார். கங்காவதி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முறைப்படி விசாரணை மேற்கொண்டுள்ளனர். வன்முறையைத் தூண்டியது எதனால் என்பதை இன்னும் சரியாகக் கண்டறியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆன்லைன் கேமிங்கிற்கு சிறுவன் அடிமையாகிவிட்டதால் இந்த தகராறு நடந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.