காரைக்குடி: இந்த முறையும் எட்டாத `வெற்றி'; தவெக சூழலில் காணாமல் போன நாதக – சீமான் சறுக்கியது எங்கே?

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காரைக்குடி தொகுதியின் முடிவு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘கோட்டை’ எனத் தம்பட்டம் அடித்த கட்சிகளின் வியூகங்களைத் தகர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மருத்துவர் பிரபு ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

சீமானின் நேரடிப் போட்டி, காங்கிரஸின் பாரம்பர்ய செல்வாக்கு என அத்தனை சவால்களையும் மீறி காரைக்குடியில் தவெக நிகழ்த்திய அரசியல் மாற்றம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீமான் நேரடியாகப் போட்டியிட்டது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “மாற்றம் எனது கொள்கை அல்ல, அது எனது உயிர்” என முழங்கி, தொகுதியின் ஒவ்வொரு மூலைக்கும் சீமான் சென்றார். அவரது உணர்ச்சிகரமான உரைகள் மற்றும் ‘மண்ணின் மைந்தன்’ அரசியல் இளைஞர்களைக் கவர்ந்தன.

சீமான்
சீமான்

சீமான் மீது வைக்கப்பட்ட “மாற்று அரசியல்” குறித்த விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர் குறித்த விவாதங்கள் ஒரு பக்கம் ஆதரவைத் திரட்டினாலும், அது வாக்குகளாக மாறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தவெக-வின் வருகை நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் என்ட்ரி, சீமானிடம் இருந்த இளைய தலைமுறை வாக்குகளைப் பிரித்ததே இவரின் தோல்விக்கு முக்கியக் காரணம்.

அதேப்போல காரைக்குடி தொகுதி கடந்த காலங்களில் காங்கிரஸின் வலுவான கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. 2021-ல் எஸ். மாங்குடி வெற்றி பெற்றபோது, அது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் பலமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறை அவர் பெற்ற வாக்குகள் தவெக-வின் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலில் சுமார் 35% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை தனது செல்வாக்கை பெருமளவு இழந்துள்ளது. ஆளும் கட்சி மீதான அதிருப்தியும், பழைய முகங்களுக்கு எதிரான மாற்றத்தை மக்கள் விரும்பியதும் மாங்குடியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மருத்துவர் பிரபு வெற்றி பெற்றிருப்பது தற்காலிகமானதல்ல. அதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.

 பிரபு,  மாங்குடி
பிரபு, மாங்குடி

தமிழகம் முழுவதும் நிலவிய ‘விஜய் அலை’ காரைக்குடியில் சுனாமியாக மாறியுள்ளது. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தவெக பக்கம் சாய்ந்தன. மருத்துவர் பிரபு தொகுதியில் ஏற்கனவே மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றவராக இருந்தார். “படித்தவர், மருத்துவர்” என்கிற பிம்பம் நடுநிலை வாக்காளர்களை எளிதாக ஈர்த்தது. காங்கிரஸ், அமமுக, நாதக என வாக்குகள் சிதறியது, தவெக வேட்பாளருக்கு மிகப்பெரிய சாதகமாக முடிந்தது.

எனவே, காரைக்குடி தொகுதியின் இந்த முடிவு, “நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல” என்பதை த.வெ.க நிரூபித்துள்ளது. சீமானின் ‘மாற்று அரசியல்’ முழக்கத்தை விட, விஜய்யின் ‘புதிய அரசியல்’ காரைக்குடி மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதே நிதர்சனம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *