ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள கீராம்பாடி கிராமத்தில் `குறுங்காடு’ உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் இயற்கை தன்னார்வலரும் வேலூரைச் சேர்ந்தவருமான தினேஷ் சரவணன். இதற்காக, ஊராட்சி நிர்வாகம் மூலம் வெட்டவெளி பகுதியை தேர்வுசெய்து, கிராம மக்கள் உதவியுடன் புளிய மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கியிருக்கிறார் தினேஷ் சரவணன்.
மொத்தமாக 1,000 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், முதற்கட்டமாக 100 புளிய மரக்கன்றுகளை நட்டு, அதற்கான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். பூமி பூஜை செய்து இயற்கையை வழிபட்ட பிறகு மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்த தினேஷ் சரவணன், பசுமைப் பரப்பை அதிகரித்து சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

அதேபோல, வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி காலனியில் அமைந்திருக்கும் மாநகராட்சி பூங்காவிலும் கல்லூரி மாணவ – மாணவியரைக் கொண்டு பூவரசம், நாவல் போன்ற 100 மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் பாய்ச்சுவதற்கான குழாய் இணைப்பு செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் தினேஷ் சரவணன். பூங்காவில் நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்துமே 5 அடி உயரம் வளர்ந்தவை. மருத்துவ குணம் மற்றும் நிழல் தரக்கூடியவையாகும். இதேபோல, மாநகராட்சியிலுள்ள மற்ற பூங்காக்களிலும் மரக்கன்றுகளை நடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் தினேஷ் சரவணன்.