பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் என பரவலாக பல பகுதிகளில் இருந்து 14 நபர்கள் புக் செய்தனர். ஒரு நபருக்கு ரூ.2,000 கட்டணம். வாகனம் மற்றும் டீ முதல் நல்ல தரமான உணவு வரை அனைத்திற்கும் ஏற்பாடு செய்தோம். தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு எல்லோரையும் வர வைத்து அங்கிருந்து காலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் பயணத்தை தொடங்கினோம். வீராணாம் ஏரி தான் முதல் ஸ்பாட். அங்கிருந்து உடையார்குடி, கடம்பூர், குடந்தை, பழையாறை, உடையாளூர் என சோழர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளை பார்வையிட்டு சோழர்களின் அடையாளமாக இருக்கும் பெரிய கோயிலில் நிறைவு செய்தோம். இதில் கலந்து கொண்ட அனைவரும் வந்தியதேவன் காவிய பயணத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக அமைந்ததாக முத்தாய்த்தனர். தடை பட்டிருந்த சோழர்களின் தடத்தை அறிவதற்கான பயணத்திற்கு மீண்டும் உயிரூட்டியவர் மாவட்ட ஆட்சியர் ரேவதி.

பயணம் முடிந்த பிறகும் வரலாற்று சுற்றுலாவில் கலந்து கொண்ட நபர்கள் இதற்கான அனுபவத்தை சிலிர்ப்புடன் பகிர்ந்து வருகின்றனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொன்னியின் செல்வன் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை காண்பதற்கும், விவசாயம் குறித்து அறிந்து கொள்வதற்கான பயணமும் நடந்து முடிந்துள்ளது. தஞ்சாவூரின் பெருமையை உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சோழர்களின் பொக்கிஷங்களை அனைவரையும் அறிய செய்ய வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ரேவதி அது தற்போது நடந்திருக்கிறது என்றனர்.