Nepal Flood: 320 இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. வெளியுறவுத்துறை அதிர்ச்சித் தகவல்! – Kumudam

Spread the love

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரு நாடுகளிலும் சேர்த்து 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் 320 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் இதுகுறித்துப் பேசுகையில், வெள்ளப் பாதிப்புப் பகுதியில் இருந்து நேற்று 21 இந்தியர்கள் பாதுகாப்பாகக் காத்மாண்டு வந்தடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், திரிசூலி நீர்மின் திட்டத்தில் பணியாற்றி வந்த 63 இந்தியர்களும், சீனப் பகுதியில் சிக்கியிருந்த 96 இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நேபாள எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இருப்பினும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 320 இந்தியர்கள் மற்றும் 100 இந்திய வம்சாவளியினரைத் இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லையெனவும், அவர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு, 2015 பூகம்பத்திற்குப் பிறகு நேபாளத்தில் நடந்த மிக மோசமான இயற்கை பேரிடராகக் கருதப்படுகிறது. தற்சமயம் 14,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, இதுவரை 3,742 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

திபெத் பகுதியில் தடுப்பணை உடைந்ததைத் தொடர்ந்து, நேபாளக் காவலத்துறை மீண்டும் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால் மீட்புக் குழுவினரும் பொதுமக்களும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *